Tuesday 24 October 2017

தாஜ்மஹாலை ஆயுதமாக்க சதி!





தாஜ்மஹாலை ஆயுதமாக்க சதி!
2019 தேர்தலுக்கு குறி

டாக்டர் டி.எம். தாமஸ் ஐசக்
திருவனந்தபுரம், அக். 23 -
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நாட்டை வகுப்புவாத ரீதியில் பிளவுபடுத்துவதற்கு தாஜ்மஹாலை ஆயுதமாக்க சங்பரிவார் தீர்மானித்துவிட்டதாக கேரள நிதி அமைச்சர் டி.எம்.தாமஸ் ஐசக் குற்றம்சாட்டியுள்ளார். “பாபர் மசூதி தகர்ப்புக்கு முன்பு அது குறித்த விவாதத்தை கிளப்பினார்கள். அதுபோன்ற ஒரு உரிமைவாதத்தை தாஜ்மஹால் மீது சங்பரிவார் முன்வைப்பதாக” தனது முகநூல் பக்கத்தில் டாக்டர் தாமஸ் ஐசக் கடும் வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். முகநூல் பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:தாஜ்மஹாலை ஆயுதமாக்கி அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நாட்டை வகுப்புவாத அடிப்படையில் பிளவுபடுத்த சங்பரிவார் முடிவு செய்துள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பாபர் மசூதியை தகர்த்தது அவர்களது தீர்மானகரமான முடிவாகும். தேச, சர்வதேச அளவில் பல்வேறு பிரிவு மக்களும் வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்படும் தாஜ்மஹாலை யோகி ஆதித்யநாத் மற்றும் வினய் கத்யார் போன்ற இரண்டாம் நிலையில் உள்ள பாஜக தலைவர்கள் குறிவைத்துள்ளதும், மத்திய அரசு இதில் மௌனம் காப்பதும் அவர்களது திட்டமிட்ட முடிவாகும்.பாபர் மசூதியை இடிக்கும் முன்பு துவக்கத்தில் அதை ஒரு சர்ச்சைக்குரிய இடமாக சித்தரிப்பதையே சங்பரிவார் செய்தது. அதன் மீது உரிமையுள்ளதாக முதலில் கூறினார்கள். அதுபோன்ற உரிமையை தாஜ்மஹால் மீது கோரவும் சங்பரிவார் முயற்சிக்கின்றது.
‘தேஜா மகாலயா’ என்கிற சிவன் கோவிலே தாஜ்மஹால் எனவும், அதற்குள் இந்துக்கள் பூஜை நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் 2015 மார்ச்சில் ஒரு வழக்கை 6 நபர்கள் கூட்டாக தொடுத்தனர். ஆக்ரா மாவட்ட நீதிமன்றத்தில்அவர்கள் தாக்கல் செய்த மனுவில் 12ஆம் நூற்றாண்டில் ராஜா பரமார்த்தி தேவ், தேஜா மகாலயா கோவிலை கட்டினார் எனவும், அதன்பிறகு ஜெய்ப்பூர் மன்னர் மான்சிங்கும்,17 ஆம் நூற்றாண்டில் ராஜா ஜெய்சிங்கும் அந்த கோவிலை பராமரித்து வந்ததாகவும், அதன் பிறகே ஷாஜகான் சக்கரவர்த்தி கோவிலைகைப்பற்றினார் எனவும் தெரிவித்துள்ளனர். வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் சம்மந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் அதிகாரப்பூர்வமாகநீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் அளித்தது. அதில் மனிதர்களால் கட்டப்பட்ட தாஜ்மஹால் என்கிற நினைவிடம் எப்போதுமே கோவிலாக இருந்ததில்லை எனவும், உண்மையில் அது ஒரு முஸ்லீம் சமாதி எனவும் கூறப்பட்டுள்ளது.ஆனால் சங்பரிவாரின் வரலாறு தெரிந்தவர் களுக்கு இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்துடன் முடிந்துவிடாது என்பது உறுதியாக தெரியும்.பீகார் மாநிலம் தர்பங்காவில் கடந்த மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், “தாஜ்மஹால் போல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைகவரும் இந்தியாவின் அடையாளங்கள் உண்மையான இந்தியாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கவில்லை” என்று குறிப்பிட்டார். இப்படிஅவர் சொன்னதற்குப் பிறகு, சுற்றுலா வரைபடத்திலிருந்து தாஜ்மஹால் காணாமல் போனது.
பட்டியல் நீள்கிறது...
இந்த வாதம் இன்று நேற்று தொடங்கியதல்ல; புருஷோத்தம் நாகேஷ் ஓக் என்கிற சுயம்சேவக் வரலாற்று ஆசிரியர் 1964இல் உருவாக்கிய இன்ஸ்டிட்யூட் ஆப் ரீரைட்டிங் ஹிஸ்டரி என்கிற நிறுவனம் அவரது “சம் பிளண்டர்ஸ் ஆப் இந்தியன் ஹிஸ்டாரிக்கல்ரிசர்ச்” என்கிற நூலை வெளியிட்டுள்ளது. அதில் ஆர்எஸ்எஸின் நிகழ்ச்சி நிரல் வெளிப்படையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. விஷ்ணு ஸ்தம்பம் என்கிற வான்நோக்கு மையமே குதுப்மினார் எனவும், பதேபூர் சிக்ரி போன்றவை அந்தந்த காலங்களில் இந்துஅரசர்களின் அரண்மனைகளாக இருந்தன என்பதும் நாகேஷ் ஓக்கின் கூற்றாகும். அவர் அதோடு நிறுத்தவில்லை மெக்காவில் உள்ள காபாவில் (சமாதி) விக்கிரமாதித்திய மன்னன் காலத்து சாசனங்கள்உள்ளதாக கூறி அரபு நாடுகள் வரை சங்பரிவாரின் நிகழ்ச்சிநிரலை விரிவுபடுத்துவதாக உள்ளது. அவற்றைப் படிக்க (http://www.hinduism.co.za/kaaba.htm) என்கிற இணையதளத்தை அணுகலாம்.
பாபர் மசூதியை தகர்த்துவிட்டு தொடங்கிய நவீன இந்துத்துவத்தின் பயணம் அடுத்த கட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. உலகமெங்கும் உள்ள கவிஞர்களையும், கலைஞர்களையும், சுற்றுலா விரும்பிகளையும் அழகை ஆராதிப்பவர்களையும் நூற்றாண்டுகளாக கவர்ந்து கொண்டிருக்கும் தாஜ்மஹாலை தங்களது நிகழ்ச்சி நிரலுக்கு இரையாக்குவது மிகப்பெரிய துயரம்.
யுனெஸ்கோவால் புராதனச் சின்னம் என பெயர் பெற்ற 35 இடங்கள் இந்தியாவில் உள்ளன. அவற்றில் முதலிடத்தில் தாஜ்மஹால் உள்ளது. இந்தியாவில் மிகவும் பிரபலமான சுற்றுலா தலம் இது.
ஆண்டுக்கு 80 லட்சம் பேர் தாஜ்மஹாலை கண்டுகளிக்கிறார்கள். இந்த எண்ணிக்கை 2020இல் ஒரு கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2016 ஜுலை மாதம் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா மாநிலங்களவையில் அளித்த பதிலில் தாஜ்மஹாலிலிருந்து கிடைக்கும் வருவாய் எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை தெளிவுபடுத்துகிறது. மூன்றாண்டுகளில் மராமத்து பணிகள் போன்றவற்றுக்காக ரூ.11 கோடி செலவு செய்த அதே நேரத்தில் நுழைவுக்கட்டணம் போன்றவற்றின் மூலமாக ரூ.75 கோடி வருவாய் என அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
செய்தித் தொகுப்பு: சி.முருகேசன்

No comments:

Post a Comment