Monday 23 September 2013

அரசின் செலவுகள் தான் காரணமா?



அரசின் செலவுகள் தான் காரணமா?
இ.எம். ஜோசப்
உணவுப் பாதுகாப்புச் சட்டம் நாடாளு மன்றத்தில் நிறைவேறியவுடன் பங்குச் சந் தைப் புள்ளிகள் சரிந்தன. இது உணவு உள் ளிட்ட சமூகப் பொறுப்புக்களை அரசு ஏற்றுக் கொள்வதற்கு எதிராக நிதி மூலதனம் அரசுக்கு விடுக்கும் எச்சரிக்கை இது. முழுமையான உணவுப் பாதுகாப்பினை இச்சட்டம் உத்தர வாதப் படுத்தாது என்ற போதும், ஏழை மக்க ளுக்காக அரசு எடுக்கும் இத்தகைய சிறிய அளவிலான நடவடிக்கையைக் கூட ஏற்க முடியாது என்ற நிதி மூலதன நிலைப்பாட்டின் பிரதிபலிப்பே இது.
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொருத்தம் இல்லாத நேரம் இது”. ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்குருமூர்த்தி உள்ளிட்டோரின் வாதம் இது. அமெரிக்காவின் வீட்டுக்கடன் குமிழி வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து, இந்திய அரசு செய்த செலவுகள் நிதிப்பற்றாக்குறை யினை பெருமளவில் உயர்த்தி விட்டது. அது தான் இன்று ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உட்பட அனைத்து நெருக்கடிகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா (பி.ஜே.பி) தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் கூறி யிருக்கிறார். இந்தக் கருத்தினை இன்றைய நிதி அமைச்சர் சிதம்பரம், அவரது அமைச்சக அதிகாரிகள் உட்பட பலரும் ஆமோதித்திருக் கின்றனர்.
நவீன-தாராளவாதக் கொள்கை களின் ஆதரவாளர்கள் அனைவருக்கும் ஏற் புடைய கருத்து இது என்பதே இதன் பொருள். ஒரு நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரிக்கிறது எனில், அந்தப் பொருளாதாரத் தினை தனது பிடியில் வைத்திருக்கும் உலக முதலாளித்துவ அமைப்போ, சந்தையின் தவறான போக்குகளோ காரணமாக இருக்க முடியாது.
மாறாக, நிதிச் சந்தையின் அறி வாற்றலை கணக்கில் கொள்ளாமல், பொருளா தாரத்தில் தனது விருப்பத்தின் அடிப்படை யில் தலையிடும் அரசு மட்டும் தான் அதில் குற்றவாளி என்பதே அவர்களின் நிலைப் பாடு. இந்த வாதம் சரிதானா? என்பதை பரி சீலிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
கிராக்கிப் பற்றாக்குறை!
நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித் திருக்கும் பின்னணியில், வளர்ச்சி விகிதமும் சரிந்திருக்கிறது. 2012-13ம் ஆண்டு 5 சத வீதமாக இருந்த வளர்ச்சி, 2013-14 முதல் காலாண்டில் 4.4 சதவீதமாக சரிந்துள்ளது. எந்திரத் தொழில் உற்பத்தியில் வளர்ச்சி (-) 1.2 சதவீதம் என எதிர்மறை நிலைக்கு சரிந் திருக்கிறது. இந்தச் சரிவிற்கு மூலப்பொருள் தட்டுப்பாடு காரணம் இல்லை. கட்டமைப்பு வசதிகள் தேவையான அளவு இல்லை என் பது கூட, வளர்ச்சியைக் கட்டுப்படுத்துமே தவிர, சரிவிற்கு இட்டுச் செல்லாது.
எனவே, கிராக்கிப் பற்றாக்குறையினைத் தவிர வேறு எந்தக் காரணத்தையும் கூற முடியாது. மொத்த மூலதன உருவாக்கம் குறைந்தும், நுகர்வுச் செலவுகள் தேக்கமடைந்தும், நாட்டில் விற் காமல் தேங்கிக் கிடக்கும் உணவு தானியங் களின் இருப்பு கிராக்கிப் பற்றாக்குறையைத் தானே உணர்த்துகிறது? ஊதிப் பெருத்திருக் கும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும், இந்தக் கிராக்கிப் பற்றாக்குறைக்கு ஒரு முக்கிய காரணம் என்பதில் ஐயமில்லை.
காத்து நிற்பது அரசுச் செலவினமே!
எந்தப் பொருளாதாரத்திலும் நாட்டின் ஒட்டுமொத்த கிராக்கியில், 1. தனியார் நுகர்வுச் செலவு 2.தனியார் முதலீடு, 3. நுகர்வு மற்றும் முதலீடுகள் உள்ளிட்ட அரசாங்கத் தின் செலவு, 4. நிகர ஏற்றுமதி மதிப்பு என நான்கு அம்சங்களுக்கும் பங்கு உண்டு. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை பெரிதாகிறது என்றால், நிகர ஏற்றுமதி எதிர்மறையாக மாறி விட்டது என்று பொருள். ஏற்றுமதிக்கான உள் நாட்டு உற்பத்தி குறையும் போது, அதன் விளைவாக குறையும் வேலை வாய்ப்புக்களும் வருமானமும் கிராக்கியின் அளவினைச் சுருக்கி விடுகின்றன.
ஒட்டு மொத்தக் கிராக்கி யில் மேலே குறிப்பிட்ட நான்கு அம்சங்களில் மூன்று சுருங்கிப் போன நிலையில், அரசின் செலவுகள் என்ற ஒன்று மட்டுமே ஓரளவு பொருளாதார வளர்ச்சியினைக் காப்பாற்றி வருகிறது. இந்தியாவில் சேவைத்துறையின் வளர்ச்சிக்கு அரசின் செலவுகளே பெரிதும் காரணம் என்பது அனைவரும் அறிந்தது தானே? பொருளாதார நடவடிக்கைகளும், வளர்ச்சி விகிதமும் ஓரளவு இயல்பாக இருக் கிறதெனில், அதற்கு பெருமளவு காரணம் அரசின் செலவினம் தான்.
தலை கீழ் வாதங்கள்!
தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து நவீன-தாராளவாதக் கருத்தாளர்கள் முன்வைக்கும் விளக்கங்கள் அனைத்துமே எதார்த்தத்திற்குப் புறம்பானவை. இந்தப் பொருளாதாரத்தில் கிராக்கி அளவிற்கு அதிக மாக இருப்பதாகவும், அது தான் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையினை உயர்த்தி விட்டது எனவும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், எதார்த்தத்தில் நிலவுவது கிராக்கிப் பற்றாக்குறையேயாகும். அளவிற்கு அதிகமான கிராக்கி நடப்புக் கணக்குப் பற்றாக்குறை யினை உயர்த்தவில்லை.
மாறாக, உயர்ந்து விட்ட நடப்புக் கணக்குப் பற்றாக்குறை தான் கிராக்கியினைச் சுருக்கியிருக்கிறது. அரசின் செலவுகள் அளவிற்கு அதிகமான கிராக்கி யினை உருவாக்கி விடவில்லை. மாறாக, கிராக்கிச் சுருக்கத்திற்கு எதிராக, வளர்ச்சி யினை ஓரளவு பாதுகாக்கும் கேடயமாக மாறி யிருக்கிறது. அரசு செலவுகள் வெட்டப்பட் டால், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஒரு வேளை சிறிது குறையலாம். ஆனால், மறுபுறத் தில், பொருளாதார வளர்ச்சி பெரிதும் குன்றி விடும்.
பெல் நிறுவனம் ஒரு எடுத்துக்காட்டு!
பெல் நிறுவனத்தை எடுத்துக் கொள் வோம். தாராள இறக்குமதிக் கொள்கைகள் காரணமாகவும், அந்நிய நாடுகளின், குறிப்பாக, கிழக்கு ஆசிய நாடுகளின் தனியார் கம்பெனி களுக்கு அவரவர் நாட்டு அரசாங்கங்கள் அளித்து வரும் ஆதரவு காரணமாகவும், இது வரை பெல் நிறுவனத்திற்கு கிடைத்து வந்த ஆர்டர்கள் பறிபோய் விட்டன. பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்திற்கு இந்திய அரசின் ஆதரவும் இல்லை.
இதனால், அதனு டைய உற்பத்தி அளவில் 50 சதவீதம் குறைந்துவிட்டது. ஒட்டு மொத்தத்தில், இறக்கு மதியின் காரணமாக உள்நாட்டு உற்பத்தி சுருங்கி வருகிறது. உள்நாட்டு உற்பத்தி சுருங்கி விட்டால், அது உருவாக்கும் வேலை வாய்ப்புக்கள் மற் றும் கூலி, அந்த வருமானத்தால் உருவாகும் வாங்கும் சக்தி, சந்தையில் அது ஏற்படுத்தும் கிராக்கி என அனைத்தும் சுருங்கித்தானே போகும்? இதில், தொடர்ந்த வளர்ச்சிக்கு வழி எங்கிருந்து கிடைக்கும்? பண்டத் தட்டுப்பாடு காரணமாக நாம் இறக் குமதி செய்யவில்லை.
தாராள இறக்குமதிக் கொள்கையின் பின்னணியில் தேவையற்ற வற்றைக் கூட இறக்குமதி செய்து வருகிறோம். நமது ஏற்றுமதிச் சந்தை நெருக்கடியில் இருக் கும் நிலையில், இறக்குமதி மட்டும் உயர்ந்து வருகிறது. இது இயல்பாக நடப்புக் கணக்குப் பற்றாக்குறையினையும், அதைத் தொடர்ந்து உள்நாட்டில் தொழில் மந்தத்தினையும், வேலையின்மையினையும் அதிகரித்து வருகிறது.
அதுவும் இதுவும் ஒன்றல்ல!
1997ம் ஆண்டுகளின் கிழக்காசிய நெருக் கடியுடன் ஒப்பிடும் போது, இன்றைய இந்திய நெருக்கடி ஒன்றும் பெரிதல்ல என அமெரிக்க பொருளாதார அறிஞர் பால்க்ருக்மேன் போன்றவர்கள் கூட எழுதி வருகின்றனர். கிழக்காசிய நெருக்கடி கட்டமைப்பு நெருக்கடி அல்ல. ஆனால், இன்றைய நமது நெருக்கடி கட்டமைப்பு நெருக்கடி. இது ஒரு அடிப்படை யான வேறுபாடு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கிழக்காசிய நாடுகளில் நெருக்கடிக்கு முன்னர், அந்நியச் செலாவணிக் கையிருப்பு, நடப்புக் கணக்கு, உள்நாட்டுச் சேமிப்பு என எவ்வகையிலும் பிரச்சனை இருந்ததில்லை. அவர்கள் செய்த தவறு என்ன தெரியுமா? குறு கியக் கால அந்நியக் கடன்களை வாங்கி, நீண்ட கால முதலீடுகளில் ஈடுபடுத்தினர். அது போன்று, அந்நியச் செலாவணியில் கடன் வாங்கி, அந்நியச் செலாவணி ஈட்ட இயலாத சொத்துக்களில் முதலீடு செய்தனர். நெருக் கடி வந்த போது இவையெல்லாம் பிரச்சனை களாக மாறின. அந்நியக் கடன் வாங்கிய வங்கி களின் சொத்துக்களில் பெரும் பகுதி, கட னைத் திருப்பி அடைப்பதில் கரைந்து போனது. ஆனாலும் கூட, கடன் நெருக்கடியின் அதிர்ச் சியினை அந்தப் பொருளாதாரம் உள்வாங்கி ஜீர ணித்த பின்னர், நெருக்கடி அகலத் தொடங் கியது. அதன் பின்னர் அந்நிய மூலதன வரவு குறைந்தது. எனினும், அதற்கு உட்பட்டு அந்நாடுகளின் பொருளாதாரம் சீரடைந்தது.
கட்டமைப்பு நெருக்கடி
நம் நாட்டின் கட்டமைப்பு நெருக்கடியில், இரண்டு பிரச்சனைகள் உள்ளன. ஒன்று, நமது நடப்புக் கணக்குப் பற்றாக்குறையின் அளவு மிகப்பெரிதாக இருப்பதால், நிகர அந்நிய மூல தன வரவுகளின் மூலம் குறுகிய காலத்தில் அதைக் குறைப்பது எளிதல்ல. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி தற்காலிகமாக ஒரு முடி விற்கு வந்து, அந்நிய மூலதனம் தேவையான அளவு வரத் தொடங்கிவிட்டாலும் கூட, அது சாத்தியம் அல்ல. ஏனெனில், பற்றாக்குறை அவ்வளவு பெரிதாக உள்ளது. இரண்டு, பொருளாதாரத் தில் உள்ள அளவிற்கு அதிகமான கிராக்கி யினைக் குறைத்தால் ஓரளவு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையினை குறைக்க முடியும். ஆனால், நம்மிடம் இருப்பதோ கிராக் கிப் பற்றாக்குறை. முழு உற்பத்தி அளவில் இயங்காத தொழில் நிறுவனங்கள், வாங்கு வாரற்றுக் கிடக்கும் உணவு தானியங்கள் என இவையெல்லாம் கிராக்கிப் பற்றாக்குறை யினை பறை சாற்றி நிற்கின்றன.
மூன்று வழிகள்!
நடப்புக் கணக்குப் பற்றாக்குறையினைக் குறைப்பதற்கு அடிப்படையில் மூன்று வழிகள் உள்ளன. ஒன்று, இப்போது நிகழ்ந்து கொண் டிருக்கும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் மூலம். இரண்டு, சிக்கன நடவடிக்கைக் கொள்கை களின் மூலம். மூன்று, இறக்குமதிக் கட்டுப் பாடுகள் மூலம். இதனை நிதி மூலதனம் எதிர்க்குமானால், அந்த மூலதனத்தையே கட்டுப்படுத்துவதன் மூலம்.
நயவஞ்சக வாதம்!
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியினையே தீர்வாகப் பயன்படுத்தும் முதல் வழியினை பார்ப்போம். நடப்புக் கணக்குப் பற்றாக்குறையின் காரண மாக வீழ்ச்சியுற்றிருக்கும் ரூபாய் மதிப்பு, ஏற்று மதிச் சந்தையில் நமது உற்பத்தியாளர்களின் போட்டித் தன்மையினை அதிகரிக்க உதவும் எனவும், அதனால் இறக்குமதி தானாகவே கட்டுக்குள் வந்து விடும் எனவும் ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது.
அதாவது, சந்தை தனது தவறுகளைத் திருத்திக் கொள்ளும் போக்கில் தான், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந் திருப்பது போலவும், அந்த வீழ்ச்சி முழுமை யானவுடன், பொருளாதாரத்தில் ஒரு சம நிலை வந்து விடும் என்பது போலவும், அந்தக் கட்டத்தில் அந்நிய மூலதன வரவின் மூலம் அனைத்தையும் சரி செய்துவிட முடி யும் என்ற திசையில் அந்த வாதம் செல்கிறது. உலகம் முழுவதும் இன்று பெருமந்தம் நிலவும் நிலையில், ஏற்றுமதிச் சந்தையில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியினால் கிடைக்கும் போட்டித்தன்மை அனுகூலம் என்பது அர்த்த மற்றுப் போய் விடுகிறது. உள்நாட்டில் நிலவும் பணவீக்கம், எண்ணெய் விலை உயர்வின் காரணமாக ஏற்படும் கூடுதல் உற்பத்திச் செலவு, அதனால் உந்தப்படும் பணவீக்கம் (ஊடிளவ-யீரளா ஐகேடயவiடிn) போன்ற அனைத்தும் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை அழித்து விடும் என்பது இங்கே மறைக்கப்படு கிறது.
இந்தச் சூழ்நிலையில் உருவாகும் பண வீக்கம் தற்காலிகமானது தான் என வாதிடு கிறார்கள். அது தற்காலிகமானது எனினும், அது ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படுத்தும் பாதிப்பு நிரந்தரமானது என்பதை மறுக்க முடியாது. இது தவிர, ரூபாய் மதிப் பிழந்து நிற்கும் இவ்வேளையில் தங்கம் ஒரு முக்கியமான சொத்தாகக் கருதப்படுகிறது. எனவே, அதன் இறக்குமதி பெருமளவில் குறைவதற்கு வாய்ப்பு இல்லை. சுங்க வரிகளை உயர்த்தி, அதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாப் பதைத் தவிர்த்து விட்டு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி யின் மூலம் பாதுகாப்பது என்பது மனிதாபி மானம் அற்ற நடவடிக்கையாகும்.
இந்த நட வடிக்கை தவறானது மட்டுமல்ல, நயவஞ்சக மானதும் கூட. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் மூலமே தீர்வு என்பதற்கு ஆதரவான வாதம் உள்ளீடற்றது மட்டுமல்ல, மக்கள் விரோத மானதும் கூட. சிக்கன நடவடிக்கை என்ற இரண்டாவது வழி பொருளாதாரத்தினை மேலும் சுருக்கி விடும். ஏற்கனவே, முழு அளவில் உற்பத்தி செய்ய இயலாத தொழிற்சாலைகள், வேலை யின்மை, வாங்குவரற்றுக் கிடக்கும் உணவு தானியங்கள் என்ற சூழல் நீடிக்கும் நிலையில், இது பொருளாதாரத்தினை மோசமாகச் சீரழித்து விடும். இறக்குமதியினைக் கட்டுப்படுத்துவது, தேவைப்பட்டால் அந்நிய மூலதனத்தினை கட்டுப்படுத்துவது என்பது மூன்றாவது வழி.
இது உற்பத்திச் செலவு காரணமாக உருவா கும் பணவீக்கத்தினை உருவாக்காது. இறக்கு மதி கட்டுப்படுத்தப் படுவதால், உற்பத்தி, வேலை வாய்ப்புக்கள், வருமானம் என உள் நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் அதி கரிக்கும். அதன் காரணமாக, ஒரு கட்டத்தில் பணவீக்கம் கட்டுக்குள் வரும். உலக வர்த்தக ஸ்தாபனம் விதிகள் அனுமதித்திருக்கும் அள விற்குக் கூட நம் நாட்டில் சுங்க வரி விகிதங் கள் இல்லாத நிலையில், அத்தகைய வரி களை உயர்த்துவது எளிதானதே.
இடைப்பட்ட காலத்தில் அரசின் தலை யீடு தொடர வேண்டும். செலவுகளால் உந்தப் படும் பணவீக்கத்தினை அரசு சில குறிப்பிட்ட வழிகளில் கட்டுப்படுத்த முடியும். ஆனால், நிதி மூலதனம் இதை ஏற்பதில்லை. எனவே, இதில் நிதி மூலதனத்தின் விருப்பங்களை மீறிச் செயல்படும் உறுதியினையும் அரசு ஏற்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, இன்று இந்திய உணவுக் கழகத்தின் கைகளில் ஏராளமாக உணவு தானியம் கையிருப்பில் உள்ளது. இதை இலவசமாக ஏழைகளுக்குக் கொடுத் தால் பலர் பசியாற உண்ணுவார்கள். மலிவு விலையில் வேறு சிலருக்குக் கொடுத்தால், அத்தகையவர்கள் ஏற்கனவே சந்தையில் அவர்கள் கொடுக்கும் விலைக்கும் அரசின் விலைக்கும் இடையிலான பணத்தினை வைத்து உள்நாட்டு உற்பத்திச் சந்தையில் கிராக்கியினை உருவாக்குவார்கள். இது பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படும் தானே? அரசு இது போன்று பல வகையிலும் செயல்பட முடியும். அத்திசையில் அரசு செயல்பட வேண்டும் என்பதே இன்று இந்தி யாவில் தொழிற்சங்கங்களும் இடதுசாரிக் கட்சிகளும் முன் வைக்கும் கோரிக்கை.
ஆதாரம் : பிரபாத் பட்நாயக் கட்டுரைகள் - பீப்பிள்ஸ் டெமாக்ரசி ( 8 - 15 செப்டம்பர், 2013)



No comments:

Post a Comment