Monday 8 July 2013

ஸ்னோடெனுக்கு தஞ்சம் அளித்தால் பொருளாதார தடை

ஸ்னோடெனுக்கு தஞ்சம் அளித்தால் பொருளாதார தடை விதிப்பதாக மிரட்டுவதா?
அமெரிக்காவிற்கு ரால்காஸ்ட்ரோ கண்டனம்

னுக்கு தஞ்சம் அளிக்கும் நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடை விதிப்போம் என்று அமெரிக்கா மிரட்டி இருப்பதற்கு கியூபா அதிபர் ரால் காஸ்ட்ரோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அமெரிக்க கம்ப்யூட்டர் நிபுணர் எட்வர்டு ஸ்னோடென் இப்போது ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள விமான நிலையத்தின் சர்வதேச பயணிகள் பகுதியில் மறைந்து இருக்கிறார். அங்கிருந்தபடியே அவர் வெனிசுலா, பொலிவியா, நிகரகுவா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அரசியல் தஞ்சம் கேட்டு கோரிக்கை விடுத்து இருந்தார். இவருடைய கோரிக்கையை ஏற்று வெனிசுலா, பொலிவியா, நிகரகுவா ஆகிய நாடுகள் ஸ்னோடெனுக்கு அரசியல் தஞ்சம் அளிக்க முன்வந்துள்ளன.
இதற்கிடையில்,ஸ்னோடெனை கைது செய்ய அமெரிக்கா மிக தீவிரமாக முயன்று வருகிறது. ஸ்னோடெனை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ரஷ்யாவை அமெரிக்கா கேட்டது. ஆனால் ரஷ்யா அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்து விட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, ஸ்னோடெனுக்கு தஞ்சம் அளிக்கும் நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது. அமெரிக்காவின் எச்சரிக்கையை அடுத்து சில நாடுகள் ஸ்னோடெனுக்கு தஞ்சம் அளிக்க மறுப்பு தெரிவித்தன. மேலும் சில நாடுகள் தஞ்சம் அளிக்க தயங்கி வருகின்றன.
இந்த நிலையில் கியூபா அதிபர் ரால் காஸ்ட்ரோ ஞாயிற்றுக்கிழமை கியூபா நாடாளுமன்றத்தின் முன் நடந்த கூட்டத்தில் பேசியதாவது:- நமது பாரம்பரியத்தின்படி உயர்ந்த லட்சியம் மற்றும் ஜனநாயகத்துக்கு போராடுபவர்களுக்கு நாம் எப்போதும் ஆதரவு அளிப்போம். அந்த வகையில் ஜனநாயகத்துக்கு எதிராக உளவு வேலையில் ஈடுபட்ட அமெரிக்க சதிக்கு எதிராக உள்ள ஸ்னோடெனுக்கு அரசியல் தஞ்சம் அளிக்க வெனிசுலா, பொலிவியா, நிகரகுவா ஆகிய நாடுகள் முன் வந்துள்ளன. இந்த நாடுகளின் முடிவை கியூபா ஆதரிக்கிறது. பொலிவியா ஜனாதிபதி இவோ மொராலஸ் வந்த விமானத்தில் ஸ்னோடென் ஒளிந்திருப்பதாகக் கூறி அவருடைய விமானத்தை வலுக்கட்டாயமாக தரை இறக்கியதை வன்மையாக கண்டிக்கிறேன். ஸ்னோடெனுக்கு தஞ்சம் அளிக்கும் நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடை விதிப்போம் என்று அமெரிக்கா மிரட்டி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. இதன் மூலம் அமெரிக்கா சர்வதேச சட்டத்தையும், உலக நாடுகளின் சுதந்திரத்தையும் மீறி இருக்கிறது. கியூபாவின் நீண்ட எதிரி நாடாக அமெரிக்கா உள்ளதால், அதன் உளவு அமைப்பான தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் உளவு சதிகளை நாம் அறிந்திருக்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment